எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 62 ஆவது பொதுக்குழு 04-05-2012 வெள்ளியன்று சகோதரர் பாலப்பா அஹ்மதுவின் இல்லத்து நீண்ட உள்ளரங்கில் மக்ரிப் தொழுகைக்குப்பின் நடந்தேறியது
சகோதரர். சாதுலி அவர்கள் இறைமறை ஓதி துவங்கி வைக்க - சகோதரர்.K.T.பாதுல் அஸ்ஹாப் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி வந்தோர் அனைவரையும் வரவேற்றார் .
தலைவர் முன்னுரை:
அடுத்து தலைவர் முன்னுரையில் டாக்டர் . இத்ரீஸ் அவர்கள் இந்நாள் வரையில் நற்பணி மன்றம் செவ்வனே நடந்தேற ஒன்றுபட்ட கருத்துகளுடன் உறுதுணையாய் நின்ற அனைத்து சகோதர்களையும் நெஞ்சார்ந்த நன்றியுடன் நினைவு கூர்ந்தார். அத்துடன் ஆடம்பரமோ ஆரவாரமோ இல்லாமல் இத்தனை காலம் இம்மன்றம் ஆற்றிய பணிகளையும் இன்றைய தேதியில் உலகளாவிய அளவில் நம் காயல் நற்பணி மன்றங்கள் உருவாவதர்க்கு ஒரு உந்துதலாகவும் முன்னோடியாகவும் விளங்கிய மாண்பினையும் விரிவாக எடுத்துரைத்தார்.மேலும் இந்த மன்றம் ஆற்றி வரும் நற்பணிகளை கண்டு வியந்த திருச்சியைச் சார்ந்த ஒரு நண்பர் இஸ்லாமிய உணர்வுகளும் சமுதாய விழிப்புணர்வும் கொண்ட பெருந்தகை சகோதரர். அப்பாஸ் அவர்கள் மனம் மகிழ்ந்து நம் மன்றத்துக்கு நன்கொடை வழங்கிய செய்தியினைப் பகிர்ந்து கொண்டார் . அடுத்து இந்த கூட்டத்தின் சிறப்பம்சமாக , இதுவரை நம் மன்றத்தின் துணை தலைவராக இருந்த ஜனாப் . மெஹர் அலி அவர்கள் தாயகம் திரும்பியதை தொடர்ந்து அவ்விடத்திற்கு புதிய துணைத்தலைவர் அறிவிக்கப் படவுள்ளதாகவும் , அதனை சகோதரர் . இம்தியாஸ் அவர்கள் முன்மொழியுமாறும் கேட்டுக்கொண்டு தன் உரைக்குத் திரையிட்டு அமர்ந்தார்.
புதிய துணைத்தலைவர் அறிவிப்பு :
மன்றத் தலைவரின் வேண்டுகோளை ஏற்று , புதிய துணைத் தலைவராக சாளை : ஜியாவுதீன் அவர்களை சகோதரர்.இம்தியாஸ் அவர்கள் முன்மொழிய அனைத்து உறுப்பினர்களும் " அல்லாஹு அக்பர் " என் ஆர்ப்பரிப்புடன் தக்பீர் முழங்கி ஒரு மனதாக ஏற்றுக்கொண்டனர்.மேலும் எல்லா உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடனும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களுடனும் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர்.சாளை. ஜியாவுதீன் அவர்கள் எந்த அளவிற்கு இந்த பதவிற்கு பொருத்தமானவர் என்பதை அனைத்து உறுப்பினர்களுக்கும் விளக்கி தன் சிற்றுரைக்கு முற்றுரையிட்டார் சகோதரர்.இம்தியாஸ் அவர்கள் .
ஜனாப் நூஹு ஆலிம் அவர்களின் பேருரை :
ஆலிம் அவர்கள் தன்னுடைய உரையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணை தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு . நபி ( ஸல் ) அவர்கள் காலத்தில் தலைவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டர்கள் என்பது பற்றியும் அவர்கள் ஆற்றிய தொண்டுகள் பற்றியும் , நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற அறிவுரைகளோடு ,இறை மறையில் என்னென்ன நற்காரியங்களுக்கு எத்தனை எத்தனை நன்மைகள் ..மற்றும் ஏழை மக்களின் நலன் காப்போருக்கு இறைவன் அளிக்கும் எண்ணற்ற பரிசுகளும் பலன்களும் குறித்து அழகாகவும் தெளிவாகவும் உரை நிகழ்த்தியது நெஞ்சத்தில் நெகிழ்வையும் நினைவில் நிற்கும் படிப்பினையாகவும் திகழ்ந்தது.
இக்ராஃ வின் புதிய தலைவருக்கு வாழ்த்து :
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் இந்த ஆண்டிற்கான சுழற்சி முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தாய்லாந்து காயல் நல மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்களுக்கு தம்மாம் காயல் நற்பணி மன்றத்து அனைத்து உறுப்பினர்களின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தலைவர் டாகடர்.இத்ரீஸ் அவர்கள் தெரிவித்தார்.
துணைத்தலைவர் ஏற்புரை :
துணைத்தலைவர் ஏற்புரையில் சாளை.ஜியாவுதீன் அவர்கள் , தன்னை ஏகோபித்த ஆதரவுடன் ஒருமனதாக தேர்ந்தெடுத்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்தார் . மேலும் தான் இந்த பொறுப்பிற்கு உண்மையுள்ளவனாகவும் , அனைத்து நற்பணிகளிலும் ஒன்றிணைந்து உறுதுணையாகவும் இருந்து செயல்படுவேன் என்று உறுதியிட்டு அமர்ந்தார்
மருத்துவ சந்தேகங்கள் :
அடுத்து நடைபெற்ற மருத்துவ கேள்வி பதில் நிகழ்ச்சியில் நம் மன்ற உறுப்பினர்களின் மருத்துவ சந்தேகங்கள் குறித்த கேள்விகளுக்கு தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் டாக்டர்.இத்ரீஸ் அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம் ,உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றத்திற்கு பின் தேநீர் சிற்றுண்டிகள் சுவையான கறிக்கஞ்சி வழங்கப்பட்டது . இறுதியாக தலைவரின் நன்றியுரையுடனும் இனிய துஆவோடும் கூட்டம் இனிதே நிறைவுற்றது .
தகவல்
B.A. முத்துவாப்பா ( புஹாரி )
செய்தித் தொடர்பாளர்
தம்மாம் காயல் நற்பணி மன்றம்